Jun 30, 2017

ஆனி திருமஞ்சனம் (30.06.2017)

தில்லை நடராஜன்
'வேனிற் காலம், ஆனி இலை அசங்க' என்பதற்கு ஏற்ப அவ்வப்போது மழை பொழியும் இதமான நாட்கள் தொடங்கும் மாதமாகத்தான் ஆனி மாதத்தை நமது முன்னோர்கள் வர்ணிப்பார்கள். ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம். இந்த ஆனி உத்திரமே, ஆடலசரனுக்கான ஆனி திருமஞ்சனமாக கொண்டாடப்படுகிறது. 
"திருமஞ்சனம் என்றால், மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப் பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி என்று ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பை பெறுகிறது. இப்படியான சிறப்புகளில், சந்தியா காலங்களாக விளங்கும் ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகதந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.
பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறையே விசேசமாக அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இந்த 2 விசேச நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே, அதிகாலையில் சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள், பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவே ஆனி திருமஞ்சனமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.


சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதைக் கண்டத்தில் நிறுத்தியதால், நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. அத்துடன் வெம்மையுள்ள சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால், சிவபெருமான் பொன்னார் மேனியாய் காட்சி அளிக்கிறார். அபிசேக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என 36 வகையான பொருட்களைக்கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் அதிகாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பிற சிவ ஆலயங்களைக் காட்டிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்னும் விசேசமாகச் சிறப்பிக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி.
ஆனி மாதத்தில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.
சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்றும், திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளதுபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. இந்த இரு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தரிசிப்பதாக ஐதீகம். சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் காட்டுவது போலவே, ஆடல் வல்லானின் திருநடனம் தலத்திற்குத் தலம் மாறுபடுகிறது.
ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும், என்பது அருளாளர்களின் சொல் வாக்கு. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்பது இறை நம்பிக்கையாக உள்ளது. அதனால், அபிசேகத்திற்கு செல்லும்போது, நம்மாள் முடிந்த அபிசேக பொருட்களைச் கொண்டு செல்வது சிறப்பு. ஆனித் திருமஞ்சன வைபவங்களில் சுமங்கலிகள் கலந்துகொள்ளும்போது, நீடுழி வாழ்கின்ற சுமங்கலி பாக்கியத்தை அவர்கள் பெறுகிறார்கள். அத்துடன் இளம் வயதினருக்கு நல்ல இடத்தில் வரன் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த உன்னத திருநாளில் முறைப்படி விரதம் இருந்து, மனமுருக வேண்டி.. ஆடலரசனின் அருளை நாமும் பெறுவோம்!

முத்தாரம்மன் சத்சங்கம்

Jun 6, 2017

வைகாசி விசாகம் (07.06.2017)

விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாக இருப்பவரும், க்ருத்திகா தேவிகளின் புதல்வரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.



வைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தைக் குறிப்பதாகும். இத்தினம் பலவகைகளில் சிறப்புப் பெற்றது. விசாக நட்சத்திரக் கூட்டம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு இணைந்தது. வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்கும் உரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். 

திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும். 

பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில் தான்.

புத்த பெருமான் அவதாரம் செய்ததும் வைகாசி விசாகத்தில்தான் என்று பெளத்த மதம் கூறுகின்றது. ‘புத்த பூர்ணிமா’ (வெசாக் பெருநாள்) என்று இதனை அழைத்து மாபெரும் சிறப்புடன் கொண்டாடுகின்றனர்.

‘வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தினம். இப்படி பல சிறப்புகள் கொண்டது வைகாசி விசாகம். 

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான்தான் சாஸ்திர ஜோதிடக் கலைக்கும் அதிபதி. எனவே, அவரது அவதார திருநாளாம் இந்த நன்னாளில் அவரை போற்றி, துதிசெய்து அபிஷேக, ஆராதனைகள் செய்து வர சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் அருள்வார். மனமுருக பிரார்த்தனை செய்தால் இறைவன் அருள் கட்டாயம் கிடைக்கும். 

சிவகுமாரனாகவும் திருமாலின் மருமகனாகவும் விளங்கும் ஞானபண்டிதன் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும். எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்க குரு ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து வழிபடலாம். குரு ஸ்தலமான திருச்செந்தூரில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, குருவின் அம்சமாகவே அருள்பாலிக்கிறார். 

வைகாசி விசாக தினத்தன்று அங்கு பரிகார பூஜைகள் செய்தால் பகை தீரும். திருஷ்டி, தோஷங்கள் விலகும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்டுவந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். அருகே உள்ள முருகன் கோயிலுக்கு சென்றும் வழிபாடுகள் செய்யலாம். 

வைகாசி விசாகம் முருகனுக்கு மட்டுமின்றி சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாககுண்டம் அமைத்து வழிபட வேண்டும். 

அம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம்மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும். கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா நடத்துவதும் வைகாசி விசாகத்தில்தான்.

வைகாசி விசாகத்தன்று பிற கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றாலும் அது முருகனுக்குரிய திருநாளாகவே கருதப்படுகிறது. 

அன்றைய தினம் பல்வகை காவடிகளை எடுத்துக்கொண்டு பக்தர்கள் கால் நடைப் பயணமாக முருகன் ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல் நிறைவேற்றுவர்.

அன்றைய தினம் திருத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே கூட முருகனை வழிபடலாம். முதலில் அவர்கள் ஸ்நானம் செய்து, திருநீறணிந்து முருகன் படத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பின் நிவேதனப் பொருட்களை வைத்து தூப தீப நைவேத்தியம் செய்ய வேண்டும். முதலில் விநாயகர் அகவல் பாடி, பின் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், காயத்ரி மந்திரம், கந்தர் அனுபூதி சொல்லி பூஜிக்க வேண்டும். சுப்ரமணிய ஷோடச நாமாவளி களையும் கூறலாம். இதன்மூலம் முருகனின் பூரண அருளைப் பெற்று பயனடையலாம்.

வைகாசி விசாக தினத்தில் முருகனை வணங்கி சகல யோகங்களும் பாக்யங்களும் பெறுவோமாக.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam